டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக புதிய வகை பக்டீரியா

209 0
டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த பக்டீரியா மூலம் டெங்கு நுளம்பின் விஷத் தன்மையினை ஓரளவு குறைத்துக்கொள்ள முடியும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த பக்டீரியாவானது தற்போது வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பக்டீரியாவானது விவசாய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட முடியும் என இதுதொடர்பில் ஆய்வு நடத்தியுள்ள அவுஸ்திரேலியாவின் மொனெஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த பக்டீரியா தொடர்பான ஆய்வினை இலங்கையில் நடத்த குறித்த பல்கலைக்கழகம் எதிர்பார்துள்ளதாகவும், இதுதொடர்பான கலந்துரையாடலை முன்னெடுக்க அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அடுத்த மாதமளவில் இலங்கை வரவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளமையினால் குப்பைகளை அகற்ற இராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று முதல் இராணுவத்தினர் அந்த பணிகளில் ஈடுபடுவார்கள் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தின தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டெங்கு மற்றும் காய்ச்சல்களால் பீடிக்கப்பட்டவர்கள் பெரசிடமோல் தவிர்ந்த ஏனைய மருந்து வகைகளை தவிர்த்து கொள்ளுமாறு இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a comment