முதல்வருக்கு ஆதரவான இன்றைய போராட்டங்கள் குறித்து தமிழ் மக்கள் பேரவை நன்றி தெரிவிப்பு

325 0

முதலமைச்சரின் நிலைப்பாடுகளிற்கெதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ள்ப்பட்டுவரும் சதி நடவடிக்கைகளுக்கு , எதிர்ப்பு தெரிவித்தும் , முதலமைச்சரின் கோட்பாடுகளுக்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியும் இன்று நடைபெற்ற கடையடைப்பிற்கு எமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளை தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

கால நெருக்கடி மிகுந்த சூழலில் , மிகக்குறுகிய முன்னறிவித்தலின்மத்தியிலும், தாமாக முன்வந்து ஆதரவு வெளிக்காட்டிய வர்த்தகப்பெருமக்கள், போக்குவரத்து சங்கங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழக சமூகம் , ஊடகங்கள் செயற்பாட்டாளர்கள் மற்றும் அனைவரும் ஒன்று திரண்டு, சதிகள்மூலம் தமிழரை அடக்கியாக நினைப்பவர்களுக்கு ஒரு பாடத்தை புகட்டியுள்ளனர்.

தமிழ் தேசியக்கொள்கைகளை நேர்மையுடன் முன்னெடுக்கும் கௌரவ விக்னேஸ்வரன் அவர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைந்த இந்த எழுச்சி, தமிழ் மக்கள் பேரவைக்கு உரியது அல்ல, இது தமிழ் சமூகத்தின் சுய எழுச்சி. ஆழ்ந்த அரசியல் தெளிவுடன் கூடிய இந்த விழிப்புணர்வும் எழுச்சியும் இருக்கும்வரை எந்த கபட நாடகங்களும் எம்மை வீழ்த்த முடியாது எனும் நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்துள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நாம் தலைசாய்த்து பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

Leave a comment