ஆளுநரின் கடிதத்திற்கு அமைவாக கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம் நிறைவு

260 0
ஆளுநரின் கடித்திற்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏ9 வீதியை மறித்து நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்ததுள்ளது. ஆளுநரின் செயலாளர் இளங்கோவனின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட கடித்திற்கு அமைவாகவே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 30-05-2017 கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றில் ஏ9 பிதான வீதியின் இரு வழிபாதையையும் மறித்து ஆர்ப்பாட்டத்தல் ஈடுப்பட்டனர்.
இன்று காலை பத்து முப்பது மணியளவில் சர்வமத பிரார்த்தனையுடன் தென்னிலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த்தினால் இறந்த மக்களுக்கும் போரின் போது கொல்லப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் ஏ9 பிரதான வீதிக்கு வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
முன்னதாக இன்று காலை கிளிநொச்சி பொலீஸார் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கு எதிராக நீதி மன்ற அறிவித்தல் ஒன்றையும் பெற்று அதனை கந்தசுவாமி ஆலய சூழலில் ஒட்டியிருந்தனர். அதில் ஒன்று கூடுவதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும்  அரசியல் அமைப்பில் தங்களுக்கு உள்ள  உரிமையினை நீதிமன்றம் மதிக்கிறது  அதே வேளையில் தங்களுடைய ஆர்ப்பாட்டத்தினால் பொது ஒழுங்கிற்கும் பொதுமக்களின் நலனிற்கும்   பாதிப்பு ஏற்ப்படாத வகையில் தங்களது ஆர்ப்பாட்டத்தை  முன்னெடுக்க  அறிவுறுத்தப் படுகின்றீர்கள்  என  குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் கிளிநொச்சி நகரில் பெருமளவு பொலீஸார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதோடு, மாவட்டச் செயலக முன்பாக பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு ஏ9 பிராதான வீதியை கிளிநொச்சி கரடிபோக்குச் சந்தியிலும் நகர பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவும் மறித்து மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை பொலீஸார் ஏற்படுத்தியிருந்தனர்.
தங்களுக்கு  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கால அட்டவனையுடன் உறுதியான பதில் கிடைக்கும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதன்போது கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் சம்பவ இடத்திற்கு சென்று பிரதமர் செயலகத்துடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும் எதிர்வரும் ஏழாம்  திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜந்து பேரை பிரதமர் தனது செயலகத்தில் சந்திப்பதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு போராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்திருந்தார்.
ஆனால் அதனை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் உயிருடன் இல்லை என யாழ்ப்பாணத்தில் வைத்து பிரதமர் தெரிவித்திருந்தார் எனவே அவரை சந்திக்க தயார் இல்லை என மறுப்புத் தெரிவித்துவிட்டனர்
இதனையடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஒரு பிரிவினர் மாவட்டச் செயலகம் நோக்கி செல்ல ஏனையவர்கள் கந்தசுவாமி ஆலயம் முன்றலில் வீதி மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இதன்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல் இளங்கோவனின் கையொப்பத்துடன் மாவட்டச் செயலகத்திற்கு தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைவாக மாலை நான்கு மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.
குறித்த கடிதத்தில் இரண்டு வாரத்திற்குள் ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்தாக குறிப்பிடப்பட்டுள்ளதனை தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் பெருமளவு கிறிஸ்த்தவ பாதியார்கள், இந்து மத குருமார்கள், தென்னிலங்கை அமைப்புக்கள்,  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு,  கிளிநொச்சி சட்டத்தரணிகள், பொது அமைப்புக்கள் , யாழ் பல்கலைகழக மாணவர்கள் என பலரும் தங்களது ஆதரவை வழங்கியிருந்தார்கள்.