மடு தேசிய பூங்காவை சரணாலயமாக பேண சத்தியலிங்கம் எம்.பி பிரேரணை

14 0

மடு தேசிய பூங்காவை தொடர்ந்தும் சரணாலயமாக பேண அமைச்சரவையின் அனுமதியைப்பெற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

மடு பிரதேச செயலாளர் பிரிவிற்கான அபிவிருத்திக்குழு கூட்டம்  25 ஆம் திகதி மடு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

இரணைஇலுப்பைக்குளம் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள பெரியபண்டிவிரிச்சான்- முள்ளிக்குளம் வீதியை மக்கள் பாவனைக்கு மேம்படுத்த பிரதேச செயலகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அபிவிருத்திக்குழுவின் பரிந்துரை கோரப்பட்டபோது வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் மேலிடத்திடம் கோரிக்கை வைப்பதாக சபைக்கு அறிவித்தார். ஆனால் இவ்வீதியானது மாந்தை மேற்கு பிரதேச சபையால் வர்த்தமானியூடாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேச சபைக்கு சொந்தமான வீதி என பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் அறிவித்தார்.

அப்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக (Extraordinary No. 1920/3 on June 22, 2015) 2015ம் ஆண்டு மடு சரனாலயமாக இருந்த காடுகள் எந்தவித கலந்துரையாடலும் இன்றி 631 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை உள்ளடக்கிய மடு- தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தேசிய பூங்காவினுள் மக்களின் வாழ்விடங்கள், வீதிகள், வணக்க நிலையங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடங்கியதாக உள்ளது.

28/06/1968 ம் ஆண்டு ஐம்பதிற்கும் குறைந்த சதுர கிலோமீற்றரிற்கும் குறைவான நிலப்பரப்புடன் பிரகடனப்படுத்தப்பட்ட சரனாலயம் எந்த கலந்துரையாடலும் இன்றி 631 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை உள்ளடக்கிய தேசிய பூங்காக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது அங்கு வாழும் மக்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.

சரனாலயமாக உள்ளபோது அப்பிரதேசமூடாக மக்கள் பயன்படக்கூடிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மக்கள் அந்த சரனாலயத்தினூடாக பயணித்த பாதைகள், வயல்கள் என எந்த பயன்பாட்டையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமுடியாத நிலைவரும் என எச்சரித்தார்.

எனவே 2015 ஆம் ஆண்டின் விசேட வர்த்தமானியை இரத்துச்செய்யுமாறும் தொடர்ந்தும் சரணாலயமாகவே இப்பிரதேசத்தை பேனுமாறும் முன்மொழிவை பிரேரித்து இப்பிரேரனையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க அபிவிருத்தி குழுவின் தலைவரை கேட்டுக்கொண்டார்.

இப்பிரேரனையை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் வழிமொழிந்து சபையானது ஏற்றுக்கொண்டது.