சட்டவிரோத வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்து ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை

6 0

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இலங்கையில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதற்கேற்ப வருமானம் வீழ்ச்சியடைந்து வரும் சுற்றுலா முரண்பாடு’குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதோடு, சட்டவிரோத வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்தும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், வெளிநாட்டவர்கள் சுற்றுலா விசாவில் தங்கியிருந்து, உரிமம் பெறாத சிற்றுண்டிச்சாலைகள், மதுபானசாலைகள், சர்ப் முகாம்கள் (Surf camps)  மற்றும் சுற்றுலா நிறுவனங்களை அதிகளவில் நடத்தி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டுப் பணம் செலுத்தும் முறைகள் ஊடாக வருமானம் வெளிநாடுகளுக்கே கசிகிறது, என அவர் எச்சரித்துள்ளதுடன், இத்தகைய நடைமுறைகள் உள்ளுர் பொருளாதாரத்தைப் பாதிப்பதோடு, இலங்கைக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயையும் இல்லாது செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகளவான சுற்றுலா வருகையினால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து விளக்கிய அவர், குறைந்த செலவில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் குவிந்து வருவதால், இயற்கை வளங்கள் சேதமடைவதாகவும், உள்ளுர் மக்கள் தங்களது சொந்த சமூகங்களிலிருந்தே வெளியேற்றப்படும் சூழல் உருவாவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யால சரணாலயம் நெரிசலால் நிரம்பியுள்ளது, சீகிரியா பாதிக்கப்பட்டுள்ளது, எமது கடற்கரைகள் மாசடைந்துள்ளன, என்று விசனம் வெளியிட்டுள்ள அவர், கட்டுப்பாடற்ற சுற்றுலாத் துறையானது நாட்டின் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் சொத்துக்களை அழித்து வருவதாகவுடம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

புத்தாக்கம் மற்றும் முதலீடுகளை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அவர், அனைத்து வணிகர்களும் ஒரே மாதிரியான விதிகளைப் பின்பற்ற வேண்டும், உரிமங்களைப் பெற வேண்டும், உள்ளுர் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் மற்றும் வரிகளைச் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எண்ணிக்கையை விட தரத்திற்கு முன்னுரிமையளிக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக இலங்கையின் ஈர்ப்பு மையங்களைப் பாதுகாக்கும் நிலையான சுற்றுலாத்துறைக்கு மாற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.அரசாங்கம் இப்போதே முறையான ஒரு கட்டமைப்பை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், அவ்வாறு செய்யத் தவறினால் தேசிய வருமானம் மற்றும் சுற்றுலாத்துறையின் நீண்டகால இருப்பு ஆகிய இரண்டும் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.