வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இந்திய துணைத் தூதரக அதிகாரி செல்வி. சி. எஸ். றம்மியா ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில்
வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதற்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது அதற்கான இறுதிக் கலந்துரையாடலாக இக் கலந்துரையாடல்அமைவதாகவும் , கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறப்புற அனைவரின் ஒத்துழைப்பினையும் நல்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் அரசாங்க அதிபரால் விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு படைகளின் அதிகாரி லெப். கேணல் கே. எம். சி. எஸ். டி. கருணாதிலக, உதவி பொலிஸ் அத்தியகட்சகர் கொ. டி. சில்வா, மேலதிக அரசாங்க அதிபர் .கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை), வைத்திய அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், படகு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

