பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொதுமக்களிடமிருந்து நிதி மோசடி செய்யும் பாரிய கும்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அதன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், ஏற்கனவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் கும்பல் மிகவும் திட்டமிட்ட முறையில் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கையின் நிலையான தொலைபேசி எண்களை ஒத்த வெளிநாட்டு எண்களிலிருந்து வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களைத் தொடர்பு கொள்கின்றனர்.
ஆரம்பத்தில் வங்கி அதிகாரிகள் போலப் பேசி, உங்கள் கணக்கு தொடர்பாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகக் கூறி பயமுறுத்துகின்றனர்.
பின்னர், சட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, பொலிஸ் அதிகாரிகள் போன்ற ஆடை அணிந்த நபர்களுடன் வட்ஸ் ஊடாக வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துகின்றனர்.
இந்த வீடியோ அழைப்புகளின் போது, தாங்கள் பொலிஸ் நிலையத்தில் இருப்பது போன்ற ஒரு சூழலை உருவாக்கி, பொதுமக்களை விசாரணை செய்வது போலவும் வாக்குமூலங்களைப் பதிவு செய்வது போலவும் நடித்து அவர்களை நம்ப வைக்கின்றனர்.
உங்களது வங்கி கணக்கைப் பாதுகாப்பதாகவோ அல்லது சரிபார்ப்பதாகவோ கூறி, அவர்கள் வழங்கும் பல வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றச் சொல்கின்றனர். இவ்வாறு பெறப்படும் பணம், பின்னர் இடைத்தரகர்கள் மூலம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில்,
வங்கி விபரங்கள், கடவுச்சொற்கள் அல்லது OTP எண்களை எவருக்கும் பகிர வேண்டாம்.
இலங்கை பொலிஸார் ஒருபோதும் வட்ஸ் வீடியோ அழைப்புகள் மூலம் விசாரணைகளை நடத்தி பணப் பரிமாற்றங்களைக் கோருவதில்லை.
இவ்வாறான சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது பொலிஸ் தலைமையகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இந்த மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும், இவ்வாறான நிதி இழப்புகளைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

