தரமற்ற நிலக்கரி கொள்வனவு: குமார ஜெயகொடி பதவி விலக வேண்டும் – விமல் வீரவன்ச

5 0

அரசாங்கத்தில் போலியான கல்வி பட்டம், போலியான சபாநாயகர், போலியான கல்வி மறுசீரமைப்பு என்று போலியான விடயங்களுக்கு குறைவில்லாமல் உள்ளது. தரமற்ற நிலக்கரி கொள்வனவுக்கான பொறுப்பை ஏற்று வலுசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி உடன் பதவி விலக வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரம் வலுவாக செயற்படுத்துகிறார். அமைச்சரவையில் உள்ளவர்களுக்கும், அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் சட்டத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மின்சார சபை அண்மையில் பாராளுமன்றத்துக்கு   ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த தரமற்ற நிலக்கரி கொள்வனவால்  767  கோடி ரூபா  நட்டம் ஏற்பட்டுள்ளதாக   குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை  நாட்டுக்கு  வந்த  கப்பல்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது நட்டம் 800 கோடி ரூபாவாக   இருக்கும்  என்று   மின்சார  சபை  மதிப்பிட்டுள்ளது.

தரம் குறைந்த நிலக்கரியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதம், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சுற்றுச்சூழலில் சேர்க்கப்படும் சேதம்,  நுரைச்சோலையைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் தாக்கம், அந்த தரம் குறைந்த நிலக்கரியைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்திற்கு ஏற்படக்கூடிய சேதம், அதனால் ஏற்படக்கூடிய இழப்பு, அதை சரிசெய்ய எடுக்கும் நேரம், அந்த நேரத்தில் அந்த 40 சதவீத  மின்சாரத்தை டீசல் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தோ அல்லது அது போன்ற ஏதாவது ஒன்றிலிருந்தோ பெற வேண்டியிருந்தால் ஏற்படும் சேதம், குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

நாட்டுக்கு  எட்டு நிலக்கரி கப்பல்கள் வந்துள்ளன. இந்த  எட்டு கப்பல்களிலும் தரம் குறைந்த நிலக்கரி உள்ளது. அந்த தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போதுஇ நிர்ணயிக்கப்பட்ட அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. குறைவாக உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் அளவை உற்பத்தி செய்ய வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட தொகையிலிருந்து கழிக்கும்போது ஏற்படும் இழப்பு இதுவாகும்.

இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற நிலக்கரியை பயன்படுத்தினால் நுரைச்சோலை அனல்மின்நிலையம் செயழிக்க கூடும்.அதனை புனரமைக்க குறைந்தது 06 மாதங்களேனும் செல்லும்.

இந்த அரசாங்கத்தில் போலியான பட்டம், போலியான சபாநாயகர், போலியான கல்வி மறுசீரமைப்பு என்று போலியான விடயங்களுக்கு குறைவில்லாமல் உள்ளது. தரமற்ற நிலக்கரி கொள்வனவுக்கான பொறுப்பை ஏற்று வலுசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி உடன் பதவி விலக வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரம் வலுவாக செயற்படுத்துகிறார். அமைச்சரவையில் உள்ளவர்களுக்கும், அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் சட்டத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளது என்றார்.