வக்பு சபைக்கான நியமன பரிந்துரையில் குறைபாடுகள் காணப்படுவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே தவறை திருத்திக் கொள்ளுங்கள். அதனை விடுத்து இனவாதத்தை தலையில் சுமந்துக் கொண்டிருக்கும் ஞானசார தேரர் போன்றவர்கள் இந்த விடயத்தில் மூக்கை நுழைக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டாம். வக்பு சபையை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்று சந்தேகம் வெளிப்படுத்தப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வக்பு சபை பற்றி தற்போது பரவலாக பேசப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தின் மத ஸ்தலங்கள் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றை நிர்வகிக்கும் புனித சிவில் அமைப்பாகவே வக்பு சபை காணப்படுகிறது. அந்த அடிப்படையில் வக்பு சபையின் சுயாதீனம் பற்றி பேசுவது எனது ஜனநாயக உரிமையாகும்.
நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அதற்கு இனவாதம் என்று முத்திரைக்குத்தி, கேள்விகளை திசைத்திருப்புவது முறையற்றது. தர்க்கரீதியான விடயங்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு பதிலளிக்காமல், பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக் கொள்கிறேன். மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் எவ்வாறான மாற்றத்த ஏற்படுத்துகிறார்கள் என்பது இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது.
வக்பு சபைக்கு தெரிவு பரிந்துரையில் பிரச்சினை காணப்படுவதாக அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. வக்பு சபைக்கு ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மற்றும் ஆளும் தரப்புக்கு சார்பாக செயற்படுபவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றை பற்றி நாங்கள் கேள்வி கேட்கும் போது இனவாதம் என்று குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறான பின்னணியின் வைத்தியர் சாபி பற்றி பேசப்படுகிறது. வைத்தியர் சாபி விவகாரத்தில் யார் குரல் கொடுத்தது என்பதை ஆராய வேண்டும். நாங்கள் தான் அன்று வைத்தியர் சாபிக்கு சார்பாக பேசினோம். இன்று ஆளும் தரப்பில் உள்ளவர்கள் எவரும் அன்று பேசவில்லை.
வக்பு சபைக்கான நியமன பரிந்துரையில் குறைபாடுகள் காணப்படுவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே தவறை திருத்திக் கொள்ளுங்கள். அதனை விடுத்து இனவாதத்தை தலையில் சுமந்துக் கொண்டிருக்கும் ஞானசார தேரர் போன்றவர்கள் இந்த விடயத்தில் மூக்கை நுழைக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டாம். வக்பு சபையை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்று சந்தேகம் வெளிப்படுத்தப்படுகிறது. ஆகவே தவறுகளை திருத்திக் கொண்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய செயற்படுங்கள் என்றார்.

