தேர்தல் சட்ட மீளாய்வு: பாராளுமன்ற விசேட குழு அமைக்க பிரேரணை – சந்தன அபேரத்ன

14 0

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும்,  அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை  ஒன்றை பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன பாராளுமன்றத்துக்கு முன்வைக்கவுள்ளார்.

பாராளுமன்ற அமர்வு 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இதற்கமைய பாராளுமன்றம் கூடும் தினங்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும்,  மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளதுடன்,  பி.ப 5.00 மணிக்கு தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும்,  அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்படும்.

நாளை புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள், (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2464/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட தீர்மானம்,  (203 ஆம் அத்தியாயம்) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் என்பன குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன்  பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

நாளை  மறுதினம் வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ‘வலுசக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள்’ என்ற தலைப்பிலான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.