சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவு ஒன்றைத் தொடர்ந்து ரயில் ஒன்று தடம்புரண்டதாக சுவிஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.
அந்த ரயிலில் சுமார் 80 பயணிகள் பயணித்த நிலையில், பல பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை 7.00 மணியளவில் Goppenstein என்னுமிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், சுவிஸ் பொலிசார் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ’ரயில் தடம்புரண்டது, பலர் காயமடைந்திருக்கலாம்’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர்.
ரயில் பனிச்சரிவில் சிக்கியதா, அல்லது பனிச்சரிவால் ரயில் பாதையில் பனி குவிந்திருந்ததால் ரயில் தடம்புரண்டதா என எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

