பிரித்தானிய குழந்தை ஒன்று போர்ச்சுகல்லில் மர்மமான முறையில் மாயமான வழக்கு 19 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டே செல்லும் நிலையில், தற்போது, எப்ஸ்டீன் கோப்புகளில் அந்தக் குழந்தையின் பெயர் இருப்பதாக ஒரு திடுக்கிடவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது, தங்கள் மகளான மேடி என்னும் மேட்லின் மெக்கேன் (Madeleine McCann) என்னும் மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர். ஜேர்மானியரான கிறிஸ்டியன் (Christian Brueckner) என்பவர் மேட்லினை கடத்தியிருக்கலாம் என கருதப்படும் நிலையில், அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.இந்நிலையில், தான் மேட்லினை பார்த்ததாக ஒரு பெண் கூறியதாக ஒரு தகவல் எப்ஸ்டீன் ஆவணங்களில் ஒன்று கூறுகிறது.
2009ஆம் ஆண்டு, தான் கடைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, ஜெஃப்ரி எப்ஸ்டீனுடைய காதலியான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல்லைப் போன்ற ஒரு பெண் நின்றுகொண்டிருந்ததாகவும், அவரது கையில் சுமார் ஆறு வயதுடைய ஒரு குழந்தை இருந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சற்று தொலைவில், நடுத்தர வயதுடைய ஒரு ஆண் நின்றுகொண்டிருந்ததாகவும், தான் அருகில் சென்று பார்க்கும்போது, அந்தக் குழந்தை மேட்லினைப் போலவே இருந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

தான் அங்கு சென்றது அந்தப் பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றும், அவர் வேகமான அங்கிருந்து செல்ல முயன்றதாகவும், அந்தக் குழந்தை தன் வலது கண்ணை கையால் மூடிக்கொண்டிருந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
மேட்லினுக்கு coloboma என்னும் அரிய பிரச்சினை இருந்ததால், அவளுடைய வலது கண்ணின் கண்மணி வித்தியாசமானதாக இருக்கும்.
அந்தப் பெண் இப்படி மேட்லின் குறித்து ஒரு விடயத்தைக் கூறியுள்ளதாக திடுக்கிடவைக்கும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க பொலிசாரோ, பிரித்தானிய பொலிசாரோ அதை புதிய ஆதாரமாக எடுத்துக்கொள்ள இயலாது என கூறியுள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

