‘AI உச்சி மாநாட்டை நடத்த இந்தியாவே சரியான இடம்’ – ஐ.நா பொதுச் செயலாளர்

16 0

“உலக விவகாரங்களில் அதிக செல்வாக்கு செலுத்தும் “மிகவும் வெற்றிகரமான” வளர்ந்து வரும் பொருளாதாரம் இந்தியா. எனவே ஏஐ (AI) உச்சிமாநாட்டை நடத்த சரியான இடம் இதுதான்” என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 20 வரை நடைபெறும் இந்தியா- ஏஐ தாக்க உச்சி மாநாடு, உலகத் தெற்கில் நடத்தப்படும் முதல் AI உச்சி மாநாடாகும். இது ‘மக்கள், உலகம் மற்றும் முன்னேற்றம்’ என்ற மூன்று வழிகாட்டும் கொள்கைகளுடன் நடத்தப்படுகிறது.

ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக ஐ.நா. தலைமையகத்தில் பேசிய குட்டரெஸ், “இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தியாவை நான் மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும், எல்லா இடங்களிலும் நன்மை பயக்கும் வகையில் ஏஐ தன்னை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மேலும் உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் ஏஐ- இன் நன்மைகளைப் பெறுவதில் ஒரு பகுதியாக இருப்பதும் மிகவும் அவசியம்.

ஏஐ மிகவும் வளர்ந்த நாடுகளின் ஒரு சலுகையாகவோ அல்லது இரண்டு வல்லரசுகளுக்கு இடையிலான பிரிவாகவோ இருப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்தார். இது அமெரிக்கா மற்றும் சீனாவைக் குறித்து அவர் பேசிய கருத்தாக உள்ளது.