இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க வங்கதேசம் விரும்புகிறது என்றும், ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றும் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஹுமாயூன் கபீர் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி(பிஎன்பி) மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் வரும் 17ம் தேதி வங்கதேச பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில், தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஹுமாயூன் கபீர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இந்திய – வங்கதேச உறவை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். இவ்விஷயத்தில், வங்கதேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் தனது பேட்டியில், பிஎன்பியின் மகத்தான தேர்தல் வெற்றியை அடுத்து வங்கதேசத்தில் மாறி இருக்கும் அரசியல் யதார்த்தத்தை அங்கீகரிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. இந்த மாற்றம் இந்தியாவின் மனநிலையிலிருந்து வர வேண்டும். இன்றைய வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவும் அவாமி லீக்கும் இனி இல்லை. மக்கள் வங்கதேச தேசியவாதக் கட்சிக்கு ஆதரவாக தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
வங்கதேசத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு காரணமான “பயங்கரவாதி” ஷேக் ஹசீனா. வங்கதேசத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வகையில் ஹசீனாவோ அல்லது அவாமி லீக் பிரமுகர்களோ தங்கள் மண்ணை பயன்படுத்தாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். வங்கதேசத்தின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையிலும் இந்தியா உடந்தையாகக் கருதப்படக்கூடாது. இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன், வழக்கமான ராஜதந்திர ஒத்துழைப்பு மீண்டும் தொடங்கலாம். நாம் அண்டை நாடுகள், பரஸ்பர நன்மைக்காக ஒன்றாகச் செயல்பட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் தாரிக் ரஹ்மானுக்கும் இடையே சமீபத்தில் அன்பான தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. அப்போது, ஒரு வசதியான நேரத்தில் இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடி, ரஹ்மானுக்கு அழைப்பு விடுத்தார்.
நாட்டின் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தாரிக் ரஹ்மான் கவனம் செலுத்துவார். இங்கு நிலைமைகள் சீரானவுடன், இந்திய வருகை உட்பட சர்வதேச பயணங்களை அவர் மேற்கொள்வார். மக்களின் வலுவான ஆணைக்கு இணங்க, வலுவான நிலையில் இருந்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம். தேசிய நலன் மற்றும் நமது பிரதேசத்தின் நல்வாழ்வு எங்கள் வெளியுறவுக் கொள்கையின் மையமாக இருக்கும். நாங்கள் விரும்புவது சமநிலையான உறவுகளைத்தான். ஒரு குறிப்பிட்ட நாட்டோடு மட்டுமே உறவுகளை வைத்திருக்கப் போவதில்லை.

