நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தை விட, நிறைவேற்றதிகாரத்துக்கு அதி உச்ச அதிகாரங்கள் கொண்டதாக தற்போதைய அரசாங்கத்தால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் ஊடகங்கள் மாத்திரமின்றி, மக்கள் தமது எண்ணங்களை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலைமை ஏற்படுமென முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
1979இல் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அப்போதைய கால கடத்தில் காணப்பட்ட மிகப் பயங்கரமான நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். அது அந்த காலகட்டத்துக்கு அவசியமாக இருந்தது. இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவே ஆட்சியாளர்களுக்கு அன்று விடுதலைப்புலிகள் அமைப்பை கட்டுப்படுத்தி யுத்தத்தில் வெற்றி பெற முடிந்தது.
எவ்வாறிருப்பினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஆட்சியாளர்களால் அந்த சட்டம் ஊடகங்களையும் எதிர்ப்பாளர்களையும் ஒடுக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். தற்போதைய அரசாங்கமும் அதற்கான நடவடிக்கைகளையேமுன்னெடுத்துள்
இந்நிலையில் 2015ஆம் ஆண்டு அதில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தயாரிக்கப்பட்டது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றமையால் அதனை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாய தேவை காணப்பட்டது. அதற்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய சட்ட மூலம் உருவாக்கப்பட்டது. அந்த சட்ட மூலத்துக்கு சமூகத்தில் பல்வேறு தரப்பினராலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. அவற்றைக் கருத்திற் கொண்டு அந்த சட்ட மூலம் இரத்து செய்யப்பட்டு, மற்றொரு புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. நிறைவேற்றதிகாரத்தால் தன்னிச்சையாக பயன்படுத்த முடியாதவாறு அந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
அந்த சந்தர்ப்பத்தில் எமக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு தவிர்க்க முடியாததாகக் காணப்பட்டதால், சகல தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடனும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இவ்வாறு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி.யினரால் அதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் யுத்த நிலைமை இல்லை என்பதால் இந்த சட்டம் தேவையற்றது என ஜே.வி.பி. எதிர்ப்பினை வெளிப்படுத்தியது.
இவ்வாறு எம்மால் உருவாக்கப்பட்ட சட்ட மூலம் தற்போதும் பாராளுமன்றத்தில் உள்ளது. அதனை நிறைவேற்றுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் அதற்கு அப்பால் ஆட்சியாளர்களுக்கு அதி உச்ச அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் தற்போதைய சட்ட மூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் மக்கள் கருத்தாடல்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. சட்டத்துறையில் நிபுணர்களும் அதில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. யாரோ ஒருவரால் எழுதப்பட்ட சட்ட மூலமாகவே அது காணப்படுகிறது.
மக்களின் சுதந்திரம் பறிக்கப்படும் போது அதில் முதலாவது இலக்கு ஊடகங்களாகும். முதலில் ஊடகங்கள் ஒடுக்கப்பட்ட பின்னரே ஏனையோர் தாக்கப்படுவர். ஊடகங்களை முடக்கினால் ஏனையோரை முடக்குவது இலகுவானதாகும். அதற்கான ஏற்பாடுகள் அந்தசட்ட மூலத்தில் காணப்படுகின்றன. இதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட வேண்டும்.
அவ்வாறில்லை எனில் எதிர்காலத்தில் மக்கள் தமது எண்ணங்களைக் கூட வெளிப்படுத்த முடியாத ஜனநாயகமற்ற சூழல் ஏற்படும் என்றார்.

