க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாளை மறுதினம் ஆரம்பம்

7 0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) நாளை மறுதினம் செவ்வாய்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.  இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையுடன் (13) சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சைக்கு 451 463 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளதோடு, அவர்களில் 382 49 பேர் பாடசாலை ஊடாகவும், 69 214 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

மேலும் நாடளாவிய ரீதியில் 3545 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. பரீட்சை நிலையங்களுக்கு பரீட்சாத்திகள் கொண்டு வரக் கூடிய பொருட்கள் தொடர்பில் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் இவ்வாண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு மார்ச் 22ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. அவற்றுக்கு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 23 முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 11 முதல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.