நினைவேந்தல் அடக்குமுறைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

520 0

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழவை தடுக்க அடக்குமுறையை ஏவி, மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட 17 தோழர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த பாஜகவின் பினாமியாக செயல்படும் தமிழக எடப்பாடி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்தில் 25-5-2017 வியாழன் அன்று மே பதினேழு இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது.

மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன், தமிழர் விடியல் கட்சியின் தோழர் டைசன், காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் தமிழ் உள்ளிட்ட 17 பேரின் கைதுகளைக் கண்டித்தும், நினைவேந்தல் எங்கள் பண்பாட்டு உரிமை என்றும் முழக்கமிட்டனர். கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற பண்பாட்டு உரிமையான நினைவேந்தல் நிகழ்வை மெரீனாவில் நடத்த தடை போடுவதென்பது சர்வதேச சட்டங்களின் படி உரிமை மீறல் என்று தெரிவித்தனர். நினைவேந்தல் உரிமையை மீட்டெடுப்போம் என்றும், ஒவ்வொரு ஆண்டும் எத்தனை அடக்குமுறை வந்தாலும், தொடர்ந்து தமிழர் கடலான மெரீனாவில் தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போதைய தமிழக அரசு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் அடியாளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழீழ இனப்படுகொலையில் இந்திய அரசும் கூட்டாளியாக இருப்பதால் இந்த நினைவேந்தலை ஒவ்வாமையுடன் பார்க்கிறது. இந்து முன்னணியினர் கோவையில் கலவரத்தில் ஈடுபட்ட போது அமைதியாக வேடிக்கை பார்த்த தமிழக அரசின் காவல்துறை, அமைதியாக மெழுகுவர்த்தி ஏந்த வந்தவர்களை வன்முறையாளர்கள் என்கிறது. தோழர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. 6 ஆண்டுகளாக மெரீனாவில் தொடர்ந்து நடந்து வந்த நினைவேந்தலை தற்போது தடுக்க முயற்சித்ததன் பின்னணியில் பாஜக இருப்பதை அனைத்து தோழர்களும் குறிப்பிட்டுப் பேசினர். 17 தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் மதிமுக துணை பொதுச் செயலாளர் தோழர் மல்லை சத்யா, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் அப்துல் சமது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் வேணுகோபால், SDPI கட்சியின் மாநில ஊடகப் பொறுப்பாளர் தோழர் கரீம், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் அரங்க குணசேகரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் தோழர் குமரன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தோழர் அருணபாரதி, தமிழர் விடியல் கட்சியின் மாநில மாணவரணி பொறுப்பாளர் தோழர் நவீன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் செள.சுந்தரமூர்த்தி, இயக்குநர் தோழர் வ.கெளதமன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் வினோத், பூவுலகின் நண்பர் தோழர் வழக்கறிஞர் சுந்தர்ராஜன், கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தின் தோழர் SP பாலகிருஷ்ணன், புத்தர் கலைக்குழு தோழர் மணிமாறன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், இளைஞர்களும், உணர்வாளர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.