நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று அவருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அவமதிப்பு வழக்கில் ஆஜராகவில்லை.
இந் நிலையில் கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் நேற்று நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி அனூஷா பேருசிங்க தேரர் சுகயீனமுற்றுள்ளதாகவும் அதனால் அவரால் நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை எனவும் அறிவித்தார். இதனையடுத்து ஞானசார தேரரை எதிர்வரும் 31 ஆம் திகதி மருத்துவ அறிக்கையுடன் மேன் முறையீட்டு நீதிமன்றில் நீதிபதிகளான பிரீத்தி பத்மன் சுரசேன, எல்.டி.பி. தெஹிதெனிய ஆகிய இருவர் கொன்ட குழு முன்னிலையில் ஆஜராக மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ரோஹினி வல்கம, எஸ். துரைராஜா ஆகியோரே இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது, ஞானசார தேரர் ஹோமாகம நீதிவான் நீதிமன்றுக்குள் அத்து மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதன் போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரசாத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைவிட அன்றைய தினம் பெரும் தொகையான பிக்குகளுடன் ஞானசார தேரர் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் உள் நுழைந்து நீதிவான் ரங்க திசாநாயக்கவை நோக்கி விரல் நீட்டி இராணுவத்தினரை பழி தீர்க்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அச்சுறுத்தல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் அன்றைய தினம் முழுதும் ஹோமாகம நீதிவான் நீதிமன்றின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து நீதிமன்றை அவமதித்தமை, அரச அதிகாரியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை மற்றும் குறித்த வழக்கின் சாட்சியாளரான சந்தியா எக்னெலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச் சாட்டுக்களின் கீழ் அவரை கைது செய்யுமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஞானசார தேரர், 2016 ஜனவரி 26 ஆம் திகதி கைது செய்யப்ப்ட்டதுடன் அவர் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் நீதிமன்றை அவமதித்தமை தொடர்பிலான வழக்கு அப்போதைய ஹோமாகம நீதிவானும் தற்போது கொழும்பு மேலதிக நீதிவானுமாகிய ரங்க திசாநாயக்கவினால் விசாரணைக்காக மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டது.
இதன் போது குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை தவிர்க்க மேன் முறையீட்டு நீதிமன்றில் ஞானசார தேரர் சார்பில் அடிப்படை ஆட்சேபனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் நீதிமன்றம் அதனை நிராகரித்தது. அதன்படி குறித்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
அதன்படி நேற்று சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிற்றர் ஜெனரால் ரொஹந்த அபேசூரிய ஆஜராகியிருந்தார். நேற்று ஞானசார தேரரை மன்ரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர் மன்றுக்கு சமூகமளித்திருக்கவில்லை. எனினும் ஞானசார தேரரின் சட்டத்தரணியான மனோகர டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணி அனூஷா மன்றில் ஆஜராகி ஞானசார தேரர் சுகயீனமுற்றுள்ளதாகவும் அதனால் அவரால் நேற்று மன்றில் ஆஜராக முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
இதனை ஏற்றுக்கொன்ட நீதிமன்றம் வழக்கை 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன் அன்றைய தினம் ஞானசார தேரர் நேற்று உண்மையிலேயே அவர் சுகயீனமுர்றிருந்தார் என்பதற்கான ஆதராமாக மருத்துவ சான்றிதழுடன் மன்றில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தர்விட்டமை குறிப்பிடத்தக்கது.

