பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதனை வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் இரண்டாவது எரிபொருள் நிரப்பு நிலையம் என்பதோடு, கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐந்தாவது எரிபொருள் நிரப்பு நிலையமும் ஆகும்.
புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த எரிபொருள் நிலையத்தையும் சேர்த்து வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு அமைப்புகளுக்குச் சொந்தமான 53 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திறப்பு விழா நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர் பசுபதி அரியரட்ணம், முன்னாள் அரசாங்க அதிபர் தி.இராசநாயகம், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் க.சிவகரன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கனகம்மா நல்லதம்பி, பூநகரி பிரதேச செயலாளர் சி.க.கிருஷ்ணேந்திரன், பிரதேச சபைச் செயலாளர் மு.இராசகோபால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளர் வீ.சண்முகநாதன், பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் து.இரத்தினசிங்கம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.