அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை கென்பராவைச் சென்றடைந்தார்.
ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ செயலாளர் மார்க் பிரேசர், கல்வி அமைச்சரும் செனட் சபை உறுப்பினருமான சிமோன் பேர்மிங்ஹம், ஆளுநர் நாயகத்தின் பிரதிச் செயலாளர் எலிசபெத் கெலி ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் அவர்களைச் சந்தித்து பல உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாடுகளுக்குமிடையே வர்த்தகம், விவசாயம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.
அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதி அமைச்சர்களான ஹர்ஷ டி சில்வா, அஜித் பி பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா, ஜனாதிபதியின் பொதுத் தொடர்புகள் பணிப்பாளர் நாயகம் சாந்த பண்டார ஆகியோர் ஜனாதிபதியுடன் இப்பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

