தொண்டர்களுக்கு கடிதம் எழுதுகிறார் சசிகலா: நடிகர் கருணாஸ் பேட்டி

229 0

தொண்டர்களுக்கு கடிதம் எழுதுகிறார் சசிகலா, சிறையில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.

அ.தி.மு.க கூட்டணி கட்சிகளில் ஒன்றான முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் நடிகருமான கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது அவர் அ.தி.மு.க அம்மா அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த 20-ந் தேதி கருணாஸ் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து கருணாஸ் கூறியதாவது:-

சசிகலா சிபாரிசு செய்ததால் தான் எனக்கு அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பளித்தார். அந்த விசுவாசத்தினால் தான் சசிகலாவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக பெங்களூர் சிறைக்கு சென்றேன். சுமார் 40 நிமிடங்கள் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்.

சிறை வாழ்க்கை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவரை சோர்வடைய வைத்திருக்கும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் கூவத்தூரில் சந்தித்த போது இருந்ததை விட கூடுதல் நம்பிக்கையுடனும், திடமாகவும் இருக்கிறார்.

தொண்டர்கள் அவருக்கு எழுதும் கடிதங்கள் தான் அதற்கு காரணம்.

அ.தி.மு.க.வை கட்டுக் கோப்பாக காப்பாற்றும் படி கட்சியின் அடி மட்டத் தொண்டர்களிடம் இருந்து தினமும் சசிகலாவுக்கு கடிதங்கள் வருகின்றன, அவரை அனைத்தையும் படித்து பார்த்து அத்தனை கடிதங்களுக்கும் பதில் எழுதுகிறார்.

அவருக்கான இப்போதைய நம்பிக்கை தொண்டர்கள் அவருக்கு எழுதும் கடிதங்கள் தான் என்பதை அவரது பேச்சில் இருந்து புரிந்து கொண்டேன்.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தான் உண்மையான விசுவாசிகளை அடையாளம் காண முடியும். இது நானும் அக்காவும் (ஜெயலலிதா) கடந்த காலங்களில் அனுபவ ரீதியாக கண்ட உண்மை. இப்போது அந்த அனுபவத்தை தொண்டர்கள் எனக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று என்னிடம் சசிகலா கூறினார். தொண்டர்களுக்காக உயிரைக் கொடுத்தாவது கட்சியை காப்பாற்றுவேன்.

இதை உண்மையான தொண்டர்களை நம்பி சொல்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க வுக்குள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள், ஓ.பி.எஸ். அணியின் நடவடிக்கைகள், மத்திய அரசின் திரைமறைவு நடவடிக்கைகள் என அத்தனை தகவல்களையும் சசிகலா தெரிந்து வைத்திருக்கிறார் வெளியில் இருப்பவர்கள் அவரை ஒதுக்கி வைத்து விட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் எந்த காரணத்தை கொண்டும் கட்சியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்ற திடமான மனதுடன் இருக்கிறார்.இவ்வாறு கருணாஸ் கூறினார்.