வெள்ளவத்தை கட்டிட சரிவுக்குள் சிக்குண்டுள்ள இளைஞரை காப்பாற்ற கூறி ஆர்ப்பாட்டம்

286 0

வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கட்டிட சரிவு அனர்த்தத்தில் சிக்குண்ட திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை கிறேக்கிலி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ராமர் நிரோஷன் என்பவரை மீட்பதில் அதிகாரிகள் அசமந்த போக்கை காட்டுவதாக தெரிவித்து (20) இன்று காலை கிறேக்கிலி தோட்டத்தின் கொழுந்து நிறுக்கும் பொது இடத்தில் குறித்த இளைஞனின் தாய் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் ஒன்றுகூடி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 150ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பாதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கட்டிட சரிவு சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்கள் கடந்த பின்பும் இளைஞனை மீட்பதில் அதிகாரிகள் கவனகுறைவுடன் செயல்படுகின்றனர். இது தொடர்பில் அதிகாரிகளிடம் இளைஞனின் உறவினர்களும் தோட்ட முக்கியஸ்தர்களும் வினவியபோது, மீட்டு தருவதாக கூறுகின்றார்களே தவிர அதற்கான ஏற்பாடுகளை இன்னும் செய்யவில்லை என தெரிவித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதேவேளை கட்டிட சரிவு அனர்த்தத்தில் சிக்குண்டதாக கூறப்படும் இளைஞன் உயிரோடு இருக்க வேண்டும் என அவ் இளைஞனுக்காக கிறேக்கிலி தோட்ட காளியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.