பருவகால பயணச்சீட்டுக்களை வைத்திருக்கும் மாணவர்கள் ; கண்டுகொள்ளாத அரச பேருந்துகள்

51 0

மாலைநேரக் கல்விக்காக வெளிமாவட்டங்களிலிருந்து கிளிநொச்சிக்குச் செல்லும் மாணவர்கள் பருவகால பயணச் சீட்டுக்களை வைத்திருக்கும் நிலையில்,  அவர்களை அரச பேருந்துகள் சில, ஏற்றாமல் செல்வதனால் மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை (8) பல மாணவ, மாணவிகள் பருவகால பயணச்சீட்டை வைத்திருந்ததன்  காரணமாக அரச பேருந்து ஒன்று அவர்களை ஏற்றாமல், கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் விட்டுச் செல்ல முற்பட்டபோது பொது மக்களுக்கும் பேருந்து சாரதி மற்றும் நடத்துநருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

மாங்குளம் பிரதேசத்திலிருந்து மேலதிக கல்விக்காக கிளிநொச்சிக்குச் செல்லும் மாணவர்கள் தினமும் பயணிப்பதற்கு பருவகால பயணச்சீட்டை பெற்று வைத்துள்ளனர். இவர்களது கல்வி நடவடிக்கைகள் மாலை 5.30 மணிக்கு நிறைவடைகின்றன.

அதன் பின்னர், ஏ9 வீதிக்கும் கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கும் செல்லும் அந்த மாணவர்களை சில அரச பேருந்துகள் ஏற்றாமல் சென்றுவிடுகின்றன. இதனால் அவர்கள் இரவு 7 மணிக்குப் பின்னரும் வீதியிலும், பேருந்து நிலையத்திலும் காத்திருந்து தங்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

சில மாணவர்கள்  பருவகால பயணச்சீட்டை வைத்திருந்தும் நேரத்தோடு வீட்டுக்குச் செல்வதற்காக பணம் கொடுத்துப் பயணிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாணவர்கள் தாமதமாக தினமும் வீட்டுக்குச் செல்வதால் சில பெற்றோர்கள் பாதுகாப்பு கருதி தங்களது  பிள்ளைகளை மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.

எனவே, உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில்  கவனம் செலுத்தி பருவகால பயணச்சீட்டை வைத்திருக்கும் மாணவர்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.