விசாரணைகளை குழப்புவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம்

61 0

ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராக கைது செய்யப்படும் இந்த சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை குழப்புவதே அவர்களின் நோக்கமாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலஞ்ச, ஊழல் தொர்பான விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அவரால் பதிலளிக்கப்பட்டுள்ளது. செயற்பாட்டு ரீதியில் அவர் அவரது நடவடிக்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

எனவே இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு இது குறித்த சட்டம் தொடர்பில் அனுபவம் இருப்பதாக நம்புகின்றோம்.

அதற்கமைய பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சபையின் ஊடாக இடம்பெற்ற தேர்வு மோசடியானது என்றால், அந்த நியமனத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும்.

அதுவே சரியான அணுகலாகும். அதனை விடுத்து ஆங்காங்கு விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை.

ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராக கைது செய்யப்படும் இந்த சந்தர்ப்பத்தில், இலஞ்ச, ஊழல் தொர்பான விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் மீது அவதூறு பரப்புவதன் ஊடாக, கம்மன்பில போன்றோரின் தேவை என்ன என்பது தெளிவாகிறது. இலஞ்ச, ஊழல் குறித்த விசாரணைகளை குழப்புவதே இவர்களின் நோக்கமாகும் என்றார்.