வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக அரசு செயல்பட வேண்டும்

37 0

வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இலங்கை அரசு செயல்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று (08) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) சமீபத்திய அறிக்கை தொடர்பான கேள்விக்கு பிரதமர் பதிலளிக்க மறுத்ததை விமர்சித்த அவர், அரசின் இந்த போக்கை கைவிட்டு உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என கோரினார்.

வழக்கமான புதன் கிழமை கேள்வி நேரத்தில் பேசிய சாணக்கியன், சென்ற வெள்ளிக்கிழமை (03.10.2025) பிரதமரிடம் முன்வைத்த கேள்விகளுக்கு இன்று பதில் கோரினார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது. உள்நாட்டு பொறிமுறையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை சர்வதேச பொறிமுறை வேண்டும் எனவும், மாகாண சபை தேர்தல் தொடப்பிலும், மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையினைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக கேள்வியானது பிரதமரிடம் முன்வைக்கப்பட்டது.

இதற்குப் பதிலாக, பிரதமர் “எனக்கு நேற்றைய தினம்தான் இந்தக் கேள்வி கிடைத்தது. இரு கிழமைகள் அவகாசம் தேவை” எனக் கூறியதை சாணக்கியன் கடுமையாக விமர்சித்தார்.