ஹுங்கம இரட்டைக் கொலை – சந்தேகநபரின் வௌிப்படுத்தல்

45 0

ஹுங்கம, வாடிகல பகுதியில் வீடொன்றில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரான பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொலைபேசி பகுப்பாய்வு மற்றும் விசாரணைகளுக்குப் பிறகு, அந்த பெண்ணும், கொலையைச் செய்த முக்கிய சந்தேகநபரான ‘அந்துபெலேனே பிந்து என்ற கடவத ஆராச்சிகே சமன் குமாரவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்ததால் இதற்கு அவர் உதவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பெண்ணின் கணவரும் போதைப்பொருள் கடத்தலுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், முக்கிய சந்தேக நபர் பொலிஸாரிடம் மேலும் பல விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது நண்பர் நெருங்கிய உறவில் இருந்த பெண்ணைக் கொல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று சந்தேகநபர் கூறியுள்ளார்.

தனது நண்பரை சுட்ட போது அவர், அந்தப் பெண்ணின் பின்னால் ஒளிந்து கொண்டதால், பெண்ணும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது போதைப்பொருள் கடத்தல் பற்றிய தகவல்களை அறிந்திருந்ததால் தனது நண்பரைக் கொன்றதாக சந்தேகநபர் கூறியதாக கூறப்படுகிறது.