இனியும் இடிந்து விழாதிருக்க இரும்புக் கம்பிகளால் முட்டுக்கொடுக்கப்பட்ட மந்திரிமனை

63 0

நல்லூர் மந்திரிமனை இனி இடிந்து விழாதவாறு பாதுகாக்கும் வகையில் தொல்லியல் திணைக்களத்தினரால் இரும்புக் கம்பிகள் மூலம் முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (17) பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த மந்திரிமனையானது கடந்த 2011ஆம் ஆண்டு தொல்பொருள் சின்னமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், அது தனியார் காணிக்குள் அமைந்துள்ள தனியார் சொத்தாக காணப்படுவதால், அதனை புனரமைக்கவோ பாதுகாக்கவோ முடியாத நிலையில் தொல்லியல் திணைக்களம் இருந்துள்ளது.

இந்நிலையில் மந்திரிமனையின் ஒரு பாகம் சேதமடைந்து, உடைந்து விழும் நிலையில் காணப்பட்டதால் அவற்றை பாதுகாக்கும் வகையில் இரும்புக் கம்பிகளால்  முட்டுக்கொடுத்து வைத்திருந்தனர்.

அந்த கம்பிகளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். கம்பிகள் இன்றி நிற்கும் அந்தப் பகுதியே நேற்றைய தினம் பெய்த மழை காரணமாக  இடிந்து விழுந்துள்ளது.

அதனையடுத்து, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் மற்றும் சி. சிறிதரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, மிகுதியுள்ள மந்திரிமனை பகுதிகளை பாதுகாப்பது தொடர்பில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.

அதன் பின்னர், இடிந்து விழுந்த பகுதியில் உள்ள ஏனைய பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் தொல்லியல் திணைக்களத்தினர் இன்று, இரும்புக்  கம்பிகளைக் கொண்டு முட்டுக் கொடுத்து வைத்துள்ளனர்.