ஞானசார தேரருக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவும் – எச்.எம்.எம். ஹரீஸ்

217 0

´நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமாக செயற்படுகின்ற ஞானசார தேரரை நாயை இளுத்துச் சென்று அடைப்பது போன்று சிறைக்குள் தள்ளி தகுந்த நடவடிக்கை எடுப்போம்´ என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தது போன்று பௌத்த தீவிரவாதிகள் மீது அவசரமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனவாத செயற்பாடுகள் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் வன்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் காட்டுமிராண்டித்தனமான இனவாத கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் முஸ்லிம்களை பீதியடைய செய்துள்ளதுள்ளன.

அண்மையில் பொலன்னறுவை ஒனேகம பிரதேசத்திற்கு சென்று இவர்களின் மற்றுமொரு இனவெறியாட்டத்தை அரங்கேற்றி இருக்கின்றார்கள். இதன்போது ஞானசார தேரர் முஸ்லிம்களின் ஏக இறைவனான எல்லாம் வல்ல அல்லாஹ்வையும், புனித அல்-குர்ஆனையும் தூசித்து மிக மோசமாகப் பேசி இருக்கின்றார். இது முஸ்லிம்களை சண்டைக்கு வலிந்திளுக்கின்ற செயலாகவே இருக்கின்றது.

அதேவேளை வெள்ளம்பிட்டி, கொஹிலவத்தை இப்றாஹிமியா ஜும்மா பள்ளிவாயல் மீது இனவாதிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு மூதூர் செல்வநகர் அருகிலுள்ள முஸ்லிம் கிராமத்தில் இனவாதிகள் காடைத்தனம் புரிந்துள்ளனர்.

இவர்கள் வெறிநாய் போன்று தொடர்ச்சியாக இனங்களுக்கிடையில் காணப்படும் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் இந்நல்லாட்சியை உருவாக்குவதற்கான தேர்தல் கால பிரச்சாரத்தின்போது ´நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமாக செயற்படுகின்ற ஞானசார தேரரை நாயை இளுத்துச் சென்று அடைப்பதுபோன்று சிறைக்குள் தள்ளி தகுந்த நடவடிக்கை எடுப்போம்´ என்று கூறி மக்களின் வாக்குப் பெற்று ஆட்சிக்கு வந்தார்கள்.

இனவாத செயற்பாட்டு பிரதானியான ஞானசார தேரருக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஏனைய செயற்பாட்டாளர்கள் அடங்கிப்போகின்ற நிலை ஏற்பட வழிவகுக்கும். இல்லாவிட்டால் முஸ்லிம் இளைஞர்களும் மக்களும் பொறுமை இழந்து வீதிக்கு வருகின்றபோது பெரும் விபரீதம் ஏற்படும்.

எதிர்வரும் புனித ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுகின்ற சூழ்நிலையில் இனவெறியர்களின் இவ்வாறான செயற்பாடு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு தம்மை தற்காத்துக் கொள்ளவேண்டிய தேவையும் உருவாக்கப்பட்டுள்ளது” என பிரதி அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தியுள்ளார்