தமிழக மக்களின் நலன் கருதி அ.தி.மு.க.வினர் செயல்படவேண்டும்: திருமாவளவன்

235 0

கோஷ்டி மோதலை கைவிட்டு அ.தி.மு.க.வினர் தமிழக மக்களின் நலன் கருதி செயல்பட வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவக்கல்லூரியில் கடந்த ஆண்டைவிட தற்போது 5 மடங்கு கல்விக் கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை-எளிய மக்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மருத்துவ படிப்பை வணிக மயமாக்குவதை விடுதலை சிறுத்தை கட்சி கண்டிக்கிறது.

கடந்த ஆண்டு கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக இன்னும் சர்ச்சை நீடிக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள், பணப்பலம் படைத்தவர்கள் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம். எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

பா.ஜனதா அரசு தனக்கு பிடிக்காதவர்கள் மீது சோதனை என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலைமைதான்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவை அரசியல் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.

அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள். எனவே அவர்கள் அ.தி.மு.க.வை காப்பாற்ற வேண்டும். கோஷ்டி மோதலை கைவிட்டு தமிழக மக்களின் நலன் கருதி செயல்படவேண்டும்.

இந்தியா உள்பட பல நாடுகள் இலங்கைக்கு நிதி உதவி செய்து வருகிறது. ஆனால் போரின்போது காணாமல்போனவர்கள் குறித்து எந்த விவரமும் இதுவரை இல்லை. இதுகுறித்து ஐநா சபையும், இந்தியாவும் மெத்தனம் காட்டி வருகிறது. மே 18-ந்தேதியை விடுதலைப்புலிகளை நினைவு கூறும் நாளாக எங்கள் கட்சி அனுசரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.