மாகாணசபைத் தேர்தலைக் கண்டு அரசாங்கம் எதற்காக அஞ்சுகின்றது? இத்தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்துக்குள்ள உண்மையான மக்கள் ஆணை என்ன என்பது வெளிப்படும். அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதைப் போன்று மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பெல்லன்வில தம்மரத்ன தேரரை சந்தித்த போதே அவர் இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் குறிப்பிடுகையில்,
இந்த அரசாங்கம் ஊடகப் பிரசாரங்கள் மூலம் முன்னோக்கிச் செல்ல முயற்சிக்கிறது. தேசிய மக்கள் கட்சி ஆட்சியேற்று ஓராண்டு நிறைவடைகிறது.
தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில் அரசாங்கம் எதனை நடைமுறைப்படுத்தியுள்ளது? வாக்குறுதிகளை ஒருபுறம் வைத்து விட்டு ஊடக பிரசாரங்களை முன்னெடுப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது. அவற்றைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை அரசியல் பழிவாங்கல்களுக்கும் உட்படுத்துகிறது.
அரசாங்கம் மாத்திரமின்றி பாராளுமன்றத்திலும் சபாநாயகரது நடத்தைகளிலும் பிரச்சினையுள்ளது. பாராளுமன்றத்தில் சபாநாயகர் என்பவர் சகல கட்சிகளுக்கும் பொதுவானவர்.
அவரால் அனைத்து கட்சி உறுப்பினர்களும் சமமாகவே நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போதைய சபாநாயகரின் நடத்தையை அவதானிக்கும் போது பாராளுமன்றத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா என்பதே சந்தேகத்துக்கிடமாகவுள்ளது. இது தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் வெளிநாட்டவர்களுக்கு நாட்டின் நிலப்பரப்பில் ஒரு அங்குலம் கூட வழங்கப்படாது எனக் கூறியவர்கள் இன்று முதலீடு என்ற போர்வையில் பல இடங்களை தாரை வார்த்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் அபிவிருத்திக்கு முதலீடுகள் அவசியமாகும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.
அதேவேளை பொது இடங்களை அந்நியர்களுக்கு வழங்கும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலின் போது மின் கட்டணம் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க மிக அழகான கதைகளை மக்களிடம் கூறினார். மின் கட்டணங்களை மூன்றில் இடங்கு மடங்கால் குறைக்க முடியும் எனக் கூறினார்.
தனது முதலாவது அமைச்சரவை கூட்டத்திலேயே அதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனக் கூறினார். ஆனால் இன்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர அவர் கூறியபடி குறைக்கப்படவில்லை.
அத்தோடு அண்மையில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
ஊழல், மோசடிகளை ஒழித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கியதாகக் கூறிய அரசாங்கம் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்காக அரசாங்கம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியைப் போன்று இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கமும் மக்களை ஏமாற்றவில்லை. அதேபோன்று தான் மாகாணசபைத் தேர்தல் விடயத்திலும் அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் தாமதப்படுத்தாது வெகு விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கடந்த அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்த முயற்சித்தால் அது தவறாகும்.
மாகாணசபை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டியவையாகும். எனவே ஆளுனர்களால் அவற்றை தொடர்ந்தும் ஆட்சி செய்ய அனுமதிக்க முடியாது.
அவசர நிலைமைகளில் அவ்வாறு செய்ய முடியும். ஆனால் வருடக்கணக்கில் ஆளுனர் ஆட்சிக்கு இடமளிப்பது தவறாகும். எனவே மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.
மாகாணசபைத் தேர்தலைக் கண்டு எதற்காக அஞ்சுகின்றனர்? இத்தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்துக்குள் உண்மையான மக்கள் ஆணை வெளிப்படும்.
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதைப் போன்று மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என்றார்.

