அரசியல் கைதியின் தந்தை மரணம் – இறுதி கிரிகையில் கலந்து கொள்ள அரசியல் கைதியை அழைத்து வர செல்வம் எம்.பி நடவடிக்கை.

249 0

மகசீன் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தந்தை நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ள நிலையில்,தந்தையின் இறுதி கிரிகைகளில் கலந்து கொள்ளுவதற்காக குறித்த அரசியல் கைதியை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற குண்டு வெப்பு சம்பவம் தொடர்பாக மகசீன் சிறையில் ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியுள்ள யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த விக்னேஸ்வரன் பார்த்தீபன் என்பவரின் தந்தையான விக்னேஸ்வரன் என்பவரே நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

இந்த நிலையில் குறித்த அரசியல் கைதியினை தனது தந்தையின் இறுதிக்கரியைகளில் கலந்து கொள்ள செய்வதற்கு ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசியல் கைதியின் அவரின் உறவினர்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சிறைச்சாலைகள் அமைச்சர் சுவாமிநாதனுடன் தொடர்பு கொண்டு நிலைமையை தெரியப்படுத்தியமைக்கு அமைவாக குறித்த அரசியல் கைதியை இறுதிக்கரியைகளில் கலந்துகொள்ள செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

குறித்த அரசியல் கைதி கடந்த 21 வருடங்களாக சிறைவாழ்வை எதிர் கொண்டுள்ளதுடன் ஆயுள் சிறை வித்திக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.