அரசாங்கத்தின் பலவீனத்தால் வெவ்வேறு அரசியல் சக்திகள் தமது தவறுகளை திருத்திக் கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இவ்வாறான சூழலில் பெற்றோரின் அரசியல் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது. எனவே மாற்று அரசியல் சக்தியான ஐக்கிய மக்கள் சக்தி வலுப்பெற வேண்டுமெனில் கட்சிக்குள் மறுசீரமைப்புக்கள் அத்தியாவசியமானதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
பண்டாரவளையில் தனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் பலவீனத்தால் வெ வ்வேறு அரசியல் சக்திகள் தமது தவறுகளை திருத்திக் கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அந்த வேலைத்திட்டத்தை சமூகம் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளும் என்பது எமக்குத் தெரியாது. ஆனால் 2019 மற்றும் 2025இல் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது ஐக்கிய மக்கள் சக்தியின் கடமையாகும்.
சில அரசியல் குழுக்கள் சதித்திட்டங்கள் ஊடாக அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றன. ஆனால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க வேண்டிய ஐக்கிய மக்கள் சக்தி அந்த பொறுப்பை மறந்து செயற்படுகின்றமை கவலைக்குரியதாகும்.
கட்சியின் தலைமைத்துவத்துக்கும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இதனை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். பெற்றோரின் அரசியலை மக்களிடம் கூறி அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய சூழல் தற்போது நாட்டில் இல்லை.
ஆனால் அரசியல் விளையாட்டுக்களும், டீல்களும் இன்றும் இருக்கின்றன. அவற்றின் ஊடாக நாட்டு மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
தொடர்ச்சியாக இரு பொதுத் தேர்தல்களிலும் ஜனாதிபதித் தேர்தல்களிலும் தோல்வியடைவதற்கான காரணத்தை இனங்காண வேண்டும். எனது தொகுதியான பண்டாரவளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தோல்விக்கான காரணம் நான் என்றால், எனது பதவியை தகுதியானவர்களிடம் ஒப்படைக்க நான் தயாராக இருக்கின்றேன்.
அதே போன்று ஏனையவர்களும் அதற்கு தயாராக இருக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் ராஜபக்ஷர்கள் பாதுகாக்கப்பட்டனர். அது ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இடம்பெறக் கூடாது. அவ்வாறு இடம்பெற்றால் அதனை எதிர்க்கக் கூடிய தைரியம் எனக்கிருக்கிறது.
அன்று ரணில், சஜித் இணக்கப்பாட்டுடன் ஒற்றுமையாக இருந்திருந்தால் இன்று நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு சென்றிருக்க முடியும். பதவி மோகத்தினாலேயே கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.
கட்சியில் யார் இருக்க வேண்டும், யார் விலக வேண்டும், யார் விலக்கப்பட வேண்டும் என்பதை பெயர் குறிப்பிட்டுக் கூற முடியும். எனக்கு எந்த பயமும் இல்லை.
தொடர்ச்சியாக கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றேன். அது இடம்பெறவில்லை என்றால் எந்த வழியிலேனும் அதற்காக அழுத்தத்தைப் பிரயோகித்துக் கொண்டிருப்பேன்.
பொருளாதாரத்தை சீர்குலைத்தவர்கள் இன்று அரசியல் நாடகங்களை அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டனர். அவர்களால் நாடு மீண்டும் பாதாளத்தில் விழுவதற்கு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி இடமளித்து விடக் கூடாது என்றார்.

