திருடப்பட்ட இறை இரக்க ஆண்டவர் சிலை மீட்பு!

300 0

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இனம் தெரியாத நபர்களினால் திருடப்பட்ட இறை இரக்க ஆண்டவர் திரு உருவச் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடம்பன் ஆள்காட்டி வெளி பங்குத்தந்தை அருட்தந்தை எ.டெஸ்மன் அஞ்சலோ குறித்த சம்பவம் தொடர்பாக தெரிவிக்கையில்,

அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆலயத்தின் உட்பகுதிக்குச் சென்ற இனம் தெரியாத மர்ம நபர்கள் ஆலயத்தில் உள்ள கண்ணாடிகளை உடைத்து இறை இரக்க ஆண்டவர் திரு உருவச் சிலையை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தோம் என்றார்.

இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கருங்கண்டல் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட சில இந்து மத நண்பர்கள் காணாமல் போன இறை இரக்க ஆண்டவர் திரு உருவச் சிலை குறித்த குளத்தில் காணப்பட்டதை அவதானித்த அவர்கள், பங்குத்தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் மீட்கப்பட்ட திரு உருவச் சிலை மீண்டும் அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் கொண்டு வரப்பட்டு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.