காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் வவுனியாவில் இன்றும் தொடர்கின்றது(காணொளி)

331 0

வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று 80ஆவது நாளாகவும் மழை, வெயில் என்பவற்றை பெருட்படுத்தாது தற்காலிக தகரக் கொட்டகைக்குள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குமாறு கோரியும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கோடீஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சி ஊடகப் பேச்சாளர் துளசி ஆகியோர் சென்று பார்வையிட்டதுடன் கலந்துரையாடினர்.

இதன்போது தீர்வு கிடைக்கும் வரை தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.