கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வியாழக்கிழமை (10) நள்ளிரவு வெளியிடப்பட்டன. அதற்கமைய இம்முறை 13 392 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர். அதேவேளை சுமார் 2 சதவீதமானோர் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த மார்ச் 17ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை 3664 பரீட்சை மத்திய நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் இடம்பெற்றன.
398 182 பரீட்சாத்திகள் பாடசாலை ஊடாகவும், 75 965 பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்திருந்த 474 147 பரீட்சாத்திகளில் 375 244 பேர் பாடசாலை ஊடாகவும், 49 908 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். அதற்கமைய ஒட்டுமொத்தமாக 425 152 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 237 026 பரீட்சாத்திகள் உயர்தரக் கல்வியை தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். இது 73.45 சதவீதமாகும். 13 392 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர்.
இது 4.15 சதவீதமாகும். மேல் மாகாணத்தில் 74 சதவீதமானோரும், மத்திய மாகாணத்தில் 73 சதவீதமானோரும், தென் மாகாணத்தில் 75 சதவீதமானோரும், வட மாகாணத்தில் 69 சதவீதமானோரும், கிழக்கு மாகாணத்தில் 74 சதவீதமானோரும், வடமேல் மாகாணத்தில் 71 சதவீதமானோரும், வடமத்திய மாகாணத்தில் 70 சதவீதமானோரும், ஊவா மாகாணத்தில் 73 சதவீதமானோரும் மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் 73 சதவீதமானோரும் உயர்தரக் கல்வியை தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஆங்கில பாடத்தில் 73 சதவீதமானோரும், விஞ்ஞான பாடத்தில் 72 சதவீதமானோரும், கணித பாடத்தில் 69 சதவீதமானோரும் சித்தியடைந்துள்ளனர்.
எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை பெறுபேறுகள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்க முடியும். 2 சதவீதமானோர் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெறுபேறுகளில் பாரியளவில் முன்னேற்றம் இல்லை.
இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. அதேவேளை இவ்வாண்டுக்கான சாதாரண தர பரீட்சைகளை 2026 பெப்ரவரியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து பரீட்சைகளை உரிய மாதங்களில் நடத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.

