வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு பகுதியில் மகாவலி திட்டத்தின கீழ் 350 ஏக்கர் நிலம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
மகாவலி திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப் பரப்பலை சீர்குலைக்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது.
வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் கொக்கச்சான்குளம் அபகரிக்கப்பட்டு கலாபோகஸ்வேவ என்னும் பெயரில் புதிய குடியேற்றம் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள மற்றொரு கிராமமான திரிவைச்சகுளம் பகுதியில் 350 ஏக்கர் நிலம் மகாவலி வலயம் என்ற போர்வையில் உள்வாங்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிலத்தை தென்பகுதி நிறுவனம் ஒன்றுக்கும், பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தமிழ் மக்களின் நிலங்கள் மகாவலி திட்டம் என்ற போர்வையில் கபளீகரம் செய்யப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெறுவதை தடுக்க முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.