டிக்கோயா வைத்தியசாலைக்கு 2011 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டிய போது நான் சுகாதார அமைச்சராக இருந்தேன். அதை திறந்து வைக்கும் போது நான் ஜனாதிபதியாக இருப்பேன் என்று நான் நினைத்திருக்கவில்லை. அதேபோல், திறப்பு விழாவில் இந்தியப் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் நான் நினைக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை வளவில் இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
நுவரெலியாவில் வாழும் மலையக மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் மட்டுமல்லாமல் உலக மக்களுக்கே இன்று ஒரு முக்கிய நாளாகும். ஏனெனில் சர்வதேச வெசாக் தினம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.பௌத்த மக்களுக்கும் இந்து மக்களுக்கும் ஆயிரம் வருடங்களாக இறுக்கமான உறவு இருந்து வருகின்றது. அந்த இறுக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்தியப் பிதமர் நரேந்திர மோடி மலையக மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை வளவில் முழுமையாக நவீன வசதிகளுடன் வைத்தியசாலை கட்டடத்தை நிர்மாணித்து கொடுத்து அதை திறந்து வைக்க வருகைத் தந்துள்ள இந்தியப் பிரதமருக்கும் இந்திய அரசுக்கும் நன்றி கோருகின்றேன்.
இந்த கட்டடத்துக்கு 2011 இல் நான் சுகாதார அமைச்சராக இருந்த போது அடிக்கல் நாட்டினேன். அது திறந்து வைக்கப்படும் போது நான் ஜனாதிபதியாக இருப்பேன் என்று நினைத்திருக்கவில்லை. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் நினைத்திருக்கவில்லை. எனவே இந்த சந்தர்ப்பத்தை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
வரலாற்று ரீதியில் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டது போல இராமாயண காலத்து தொடர்பு இருந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உலக மத்தியில் மத்தியில் மிகுந்த மதிப்பு கொண்டுள்ள மகாத்மா காந்தி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இன்றும் அந்த தொடர்பு வலுவடைந்து வருகின்றது.
பெருந்தோட்ட மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமை பெறுவதில் அரசியல் ரீதியாக பல பிரச்சினைகள் இருந்து வந்தன. 1964 இல் ஸ்ரீமா – சாஸ்திரி ஒபந்தம் செய்து கொள்ளப்பட்டதன் பின்னர் படிப்படியாக பிரஜாவுரிமை பெரும் நிலைமை ஏற்பட்டது. இன்று அனைவருக்கும் பிரஜாவுரிமை கிடைத்துள்ளது. இன்று நாம் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் உள்ளோம். சிங்களஇ தமிழ்இ முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். தேசிய ஒற்றுமை ஊடாகவே இனகளுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அதற்கு அர்ப்பணிப்போடு அனைவரும் செயற்பட வேண்டும்.
வட பகுதி மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. எனவேதான், 25 வருடங்களுக்கு மேலாக பாரிய போராட்டத்துக்கு முகங் கொடுக்க நேர்ந்தது. அதேபோல்இ பெருந்தோட்ட மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. எனவே இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயன்று வருகிறோம். மலையக மக்கள் ஏனைய மக்களுக்கு இணையாக வாழ்வதற்கு செயற்படுவோம் என்றார்.