சந்திரிக்காவும், மகிந்தவும் அடுத்தடுத்த ஆசனங்களில்! மரியாதை செலுத்தினார் மோடி!

257 0

ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு தனது மரியாதையையும், வணக்கத்தையும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெசாக் தின நிகழ்வுகள் இன்று அரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஸ, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள் மற்றும் 85 நாடுகளை சேர்ந்த பௌத்த பிக்குமார்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த மஹிந்த ராஜபக்ஸவிற்கு இந்தியப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.

பதிலுக்கு மஹிந்தவும் இருகரம் கூப்பி தனது மரியாதையை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமரை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த நிலையிலேயே, இன்று நடைபெற்ற வெசாக் நிகழ்வுகளில் இருவரும் தமது மரியாதையை வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு இடையில் கடும் கருத்து முரண்பாடுகள் இருந்து வருகின்றன.

சந்திரிக்கா பல கூட்டங்களில் மகிந்த ராஜபக்சவை கடுமையான விமர்சித்துள்ளார். அதேபோல் மகிந்த ராஜபக்சவும் சந்திரிக்காவை தனது ஆட்சிக்காலத்தில் அரசியல் ரீதியாக பழிவாங்கியதாகவும் அவரது பாதுகாப்பை குறைத்ததாகவும் குற்றம் சுமத்தியமை குறிப்பிடத்தக்கது.