“ஒடிஸி கேம்பர்” ஆடம்பர புகையிரத விடுதி

58 0

இலங்கை புகையிரத திணைக்களத்தினால் ஒதுக்கபப்பட்ட W1வகை என்ஜின், இரண்டு பழைய இந்திய புகையிரத பெட்டிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புகையிரத பெட்டி ஆகியவற்றை கொண்டு ஆடம்பர  விடுதி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடம்பர புகையிரத விடுதி இரத்மலானை பிரதான புகையிரத வேலைத்தளத்திலுள்ள ஊழியர்கள் வடிவமைத்துள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

“ஒடிஸி கேம்பர்” (Odyssey camper )  என்று பெயரிடப்பட்ட இந்த தனித்துவமான விடுதி விரைவில் திறக்கப்பட உள்ளது.

சக்கரங்களில் இயங்கும் ஆடம்பர ஹோட்டல் தற்போது  நானுஓயாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

அங்கு புகையிரத ஹோட்டலில் மலையகத்தில் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அழகிய காட்சிகளை கண்டு கழிக்கலாம்.

இந்த ஆடம்பர ஹோட்டல் இரத்மலானையில் உள்ள 21, 25 மற்றும் 26 புகையிரத வேலைத்தளத்திலுள்ள ஊழியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு பெரிய படுக்கை, வெப்பமூட்டும் வசதிகளுடன் குளியலறை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. B&B முறைப்படி, சேவைகளை வழங்கும் இந்த ரயிலில் இரவைக் கழிப்பதன் மூலம், நானுஓயா புகையிரத பங்களாவில் அழகான சூழலில் வழங்கப்படும் சுவையான காலை உணவையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.

இந்த ஆடம்பர ஒடிஸி கேம்பர்  ஹோட்டல் திட்டம் பொது முகாமையாளர் தம்மிகா ஜெயசுந்தரவின் வழிகாட்டலின் கீழ் புகையிரத மேற்பார்வை பொறியிலாளர் (திட்டங்கள் மற்றும் மேம்பாடு) ஜி.ஏ. கிருஷாந்த மற்றும் வேலைத்தளம் 26 இன் மேற்பார்வை முகாமையாளர் எச்.ஜே.ஆர். பொன்சேகா ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய புகையிரத ஹோட்டல் திட்டம் மலைநாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு சிறந்த முறையில் விடுமுறையை கழிக்க வழிவகுக்கும். இது புகையிரத பயணத்தின் அழகையும் நவீன வசதிகளையும் மெருகேற்றும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.