தமிழின அழிப்புக்கு நீதி கோரி 2 வது நாளாக தொடரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

445 0

வலிகள் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் தமிழின அழிப்புக்கு நீதிகோரி 2 வது நாளாக தொடரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்றைய தினம் Augsburg நகர மத்தியில் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சிப் பதாதைகளை அமைத்து வேற்றின மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி நீதிக்காக ஏங்கித் தவிக்கும் தமிழ் மக்களுக்காக நியாயத்தை தேடிச் சென்றனர்.அத்தோடு மத்திய நேரம் Augsburg நகரபிதாவின் அலுவலகத்துக்குச் சென்றும் ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இனவழிப்பு என அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனுக் கையளித்தனர்.வேற்றின மக்களின் ஆதரவையும், எமது போராட்டத்தின் நியாயத்தையும் அவர்கள் விளங்கிக்கொண்ட நிலைமையையும் இன்றைய விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தின் பலனாக அறுவடை செய்யக்கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் München நகரில் விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தின் நிறைவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இன்று நாம் எதிர்கொள்ளும் அரசியல் ரீதியான சவால்களையும் அத்தோடு எமது அரசியற் செயற்பாடுகள் சார்ந்தும் கலந்துரையாடப்பட்டதோடு, தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய தமிழ்த் தேசியத்தை நோக்கிய கடமைகளை மீள்நினைவுப்படுத்தி , ஒன்றுபட்ட சக்தியாக நாம் விடுதலை அடையும்வரை தளராமல் போராடவேண்டும் என்று உறுதியெடுக்கப்பட்டது.

3 வது நாளாக நாளைய தினம் மதியம் 1 மணிக்கு Stuttgart நகரத்தில் Königstr / Marstall Str இடத்திலும் மாலை 6 மணிக்கு Karlstruhe நகரத்தில் Marktplatz இடத்திலும் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறும்.