வடக்குக் கிழக்கில் 6000 பொருத்து வீடுகளை அமைக்க அமைச்சரவை அனுமதி!

261 0

வடக்கு, கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைஅனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தலா 15 இலட்சம் ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளது.

சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்கில் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றை புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை அமைப்பதற்கு மத்திய அரசின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக வீடுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செயற்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள முன்நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு வேலைத்திட்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழுவின் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு, ஒரு வீட்டுக்கு 1.5 மில்லியன் ரூபா எனும் அடிப்படையில் 6 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழு தீர்மானித்துள்ளது.

அதன் அடிப்படையில் 6 ஆயிரம் முன்நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை அமைப்பது தொடர்பில் மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.