மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்

101 0

யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

குறித்த துறைமுக அபிவிருத்தி பணிகள் மூன்றாம் கட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டத்தின் கீழ் வடமாகாணத்திலுள்ள மீனவ சமூகம், கிழக்கு மற்றும் தென் மாகாணத்திலிருந்து வருகைதரும் மீன்பிடிப் படகுகளுக்கான நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், மீனவர்களுக்குத் தேவையான வலை தயாரிக்கும் வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் வான்வழிச் செய்திப் பரிமாற்ற வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கிணங்க, மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள தரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கும், கருத்திட்டக் காலப்பகுதியை 2027 வரைக்கும் நீடிப்பதற்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.