சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற “ஷான் சுத்தா” கைது

84 0

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரரான “ஷான் சுத்தா” என அழைக்கப்படும் சம்பத் குமார என்பவர் மொனராகலை , மல்லத்தாவல பிரதேசத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (03) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மொனராகலை – வெல்லவாய பிரதேசத்தில் மே மாதம் 30 ஆம் திகதி வெல்லவாய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரரான “ஷான் சுத்தா” என அழைக்கப்படும் சம்பத் குமார என்பவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது “ஷான் சுத்தா” பொலிஸ் அதிகாரிகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதனால் “ஷான் சுத்தா”வின் கால் பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

 

காயமடைந்த “ஷான் சுத்தா” வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

 

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த “ஷான் சுத்தா” இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் “ஷான் சுத்தா” மொனராகலை , மல்லத்தாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

“ஷான் சுத்தா”வுக்கு எதிராக நீதிமன்றினால்  5 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.