கிளிநொச்சி அலுவலகங்களில் பெரும்பான்மையின அலுவலக உதவியாளர்கள் நியமிப்பு

249 0
கிளிநொச்சியில் உள்ள சில  மத்திய அரசின் திணைக்களங்களில் சமீப காலமாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்கனவே பல வருடங்களாக அமைய அடிப்படையில் பணியாற்றி நிரந்தர நியமனம் கிடைக்காத மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சியில் இவ்வருடம் ஜந்து அலுவலக உதவயாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கரைச்சி பிரதேச செயலகத்திற்கும், இருவர் மாவட்டச் செயலகத்திற்கும் ஒருவர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல வருடங்களாக அமைய அடிப்படையில் பணியாற்றிய பலர் நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில் உள்ள போது  தென்னிலங்கைளில் இருந்து அலுவலக உதவியாளர் பதவிக்கு அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் ஒரு அலுவலக உதவியாளர் ஒய்வுப்பெற்ற சில நாட்களிலேயே தென்னிலங்கையில் இருந்து  நியமனங்கள் வழங்கப்படுகிறது. என மாவட்டச் செயலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
அலுவலக உதவியாளர் பதவிகள் அரசியல் செல்வாக்கின் அடிப்படையிலேயே நியமிக்கப்படுகின்றன. மிகவும் குறைந்த தகமைகளுடனான இப்பணிக்கு பொருத்தமானவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் மாவட்டச் செயலக வேலை வங்கியில் தங்களது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.   அத்தோடு இப் பதவியானது எந்த நேரத்திலும் சமூகமளித்து கடமைகளைச் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக காணப்படுகிறது. எனவே இந்தப் பதவிகளுக்கு அந்தந்த மாவட்டச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதே பொருத்தமானதாகும்;, அதனை இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளே செய்ய வேண்டும் தொடர்ந்தும்  எமது இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார் அவர்.
அத்தோடு தற்போது நியமனம் பெற்று வந்தவர்கள் சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் இடமாற்றம் பெற்று தங்களின் பிரதேசங்களுக்கு சென்றுவிட்டால் இங்குள்ள வெற்றிடம் நிரப்பபடாதே காணப்படும்  ஆனால் பதிவில் ஆளணி வெற்றிடம் நிரப்பட்டதாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்;