இலங்கையின் அபிவிருத்தியை சாத்தியமாக்குவதில் மிகமுக்கிய பங்காளியாக உலக வங்கி திகழ்வதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (7) நாட்டுக்கு வருகைதந்திருக்கும் உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவுக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (7) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜித்த ஹேரத், இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு உலக வங்கி தொடர்ச்சியாக வழங்கிவரும் வலுவான ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
அதேவேளை கல்வி, சுற்றுலா, விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்திவலு, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் ஒத்துழைப்பு செயற்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் திட்டங்கள் குறித்து அமைச்சர் விஜித்த ஹேரத் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுக்கு விளக்கமளித்தார்.
இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் விஜித்த ஹேரத், இலங்கையின் அபிவிருத்தியை சாத்தியமாக்குவதில் மிகமுக்கிய பங்காளியாக உலக வங்கி திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

