ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: போலீசார் 9 பேர் பலி

304 0

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் சிக்கி 9 போலீசார் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

ஈராக்கின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல் நகரின் மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் போலீஸ் படையினர் முகாமிட்டு இருந்தனர்.

அப்போது 4 கார்களில் வெடிகுண்டுகளை நிரப்பி கொண்டு வந்த தற்கொலைப்படையை சேர்ந்த பயங்கரவாதிகள், போலீசார் முகாமிட்டு இருந்த இடத்திற்கு அருகே சென்று குண்டுகளை வெடிக்க செய்தனர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் இந்த பகுதியே அதிர்ந்தது. கரும் புகை மண்டலம் உருவானது. அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 ராணுவ வாகனங்கள் தீக்கிரையாகின. சற்றும் எதிர்பாராத திடீர் தாக்குதலால் போலீசார் நிலைகுலைந்து போயினர். குண்டுவெடிப்பில் சிக்கி போலீசார் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.