யாழ்ப்பாணம் இளவாலையில் உந்துருளி விபத்து !உப பொலிஸ் பரிசோதகர் பலி

223 0

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும்  மூவர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில்  படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகரான 31 வயதான துரைராஜசிங்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பெற்று இளவாலையில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் பணியில் இணைவதற்காக தனது சகோதரனுடன் உந்துருளியில் சென்று கொண்டிருந்த வேளை சித்தண்கேணி பகுதியில் நேர் எதிரே வந்த மற்றுமொரு உந்துருளியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரு உந்துருளிகளிலும் வந்த நால்வரும் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உப பொலிஸ் பரிசோதகர் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக இளவாலை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.