மட்டக்களப்பு நகரில் உள்ள தேர்தல் அலுவலத்தில் இன்றைய தினம் (14) அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியது.
போராட்ட முன்னணியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 12 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தப்போவதாகவும் பொதுமக்களுக்கு புதிய ஆட்சி முறையினை அறிமுகப்படுத்துவதாகவும் போராட்ட முன்னணியினர் தெரிவித்தனர்.
அத்துடன், இன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஊடாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதுடன் இம்முறை 11 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ளதாக தர்மலிங்கம் சுரேஸ் இதன்போது தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தலைமையில் தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ளதாகவும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஊடாக ஐக்கிய தேசிய கட்சி அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றும் எனவும் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
இதேபோன்று கடந்த முறை மண்முனை தென் மேற்கு பிரதேச சபையில் சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தவர்கள் இம்முறை சுயேட்சையாக போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தினார்கள்.



