உறுதியளித்தபடி பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச்செய் வற்வரிச்சுமையை குறைத்திடு என கோரும் பொதுமனுவில் கையெழுத்திடும் போராட்டத்தினை மக்கள் பேரவைக்கான இயக்கம் யாழ் பஸ்நிலையம் அருகில் இன்று ஆரம்பித்தவேளை அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கையில் மிக மோசமான மனித உரிமைகளை மீறக்கூடிய ஒரு சட்டமாக பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுகின்றது.
இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினால் மிகநீண்டகாலமாக தமிழ் மக்கள் மிக மோசமான பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் ஏனைய சட்டங்களை விட மிகமோசமான சட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
ஒருவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் கிட்டத்தட்ட 90 நாட்கள் வரை தடுத்துவைக்க முடியும்.
அதன் பின்னர் பல ஆண்டுகள் தடுத்துவைத்திருக்கின்றார்கள் , 15 ஆண்டுகள் தடுத்துவைத்திருக்கின்றார்கள்,15 ஆண்டுகளின் பின்னர் குற்றமற்றவர்கள் என விடுதலையாகியுள்ளார்கள்.
எனவே இப்படி ஒரு மோசமான சட்டம் நாட்டில் இருக்ககூடாது என்பதற்காக நாங்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த போராட்டங்களின் போது கடந்தகாலங்களில் தேசிய மக்கள் சக்தியினர் இந்த சட்டத்தை நீக்கவேண்டும் என எங்களுடன் சேர்ந்து குரல்கொடுத்திருந்தார்கள்.
ஆட்சிபொறுப்பை ஏற்பதற்கு முன்னர் இந்த சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதை அவர்கள் மக்களிற்கு தெரிவித்திருந்தார்கள் ஆனால் இன்று ஆட்சி பொறுப்பை ஏற்று இத்தனை நாள் சென்ற பிறகும் சட்டம் அப்படியே இருக்கின்றது.
அதனை நீக்குவதற்கான எந்தவொரு முயற்சியையும் அவர்கள் எடுக்கவில்லை என்ற பாரிய குற்றச்சாட்டு அவர்கள் மேல் உள்ளது.
எனவே நாங்கள் மக்கள் மத்தியில் சென்று இந்த பொதுப்பதாகையில் கையெழுத்திடும் வேலை திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
இது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு செய்தியாகவும் மக்களின் ஆணையை அரசாங்கம் மீறுகின்றது என்பதை நினைவூட்டுவதற்காகவும் நாங்கள் இதனை செய்துகொண்டிருக்கின்றோம்.