பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்க மறியல் நீடிப்பு

218 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் ஜுன் மாதம் 07 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வை.எம்.வை.இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த 11.10.2015 அன்று சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 04 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் ஜுன் மாதம் 07 திகதிவரை 4 பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.